Skip to main content

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம்

நினைவுகளை விட்டு நீங்காத சுமை!

’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம்.

தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது.

அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

Vaazhai Movie Review

தொடரும் சுமை!

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிவனணைந்தான் (பொன்வேல்), சேகர் (ராகுல்) இருவரும் அரசுப் பள்ளியொன்றில் படிக்கின்றனர்.

பள்ளி செல்லும் ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எல்லா மாணவர்களுக்கும் இனிப்பாகத் தெரியும். ஆனால், அவர்கள் இருவருக்கும் அந்நாட்கள் கசப்பாகத் தெரிகின்றன. காரணம், அவ்விரு நாட்களிலும் சிவனணைந்தானும் ராகுலும் ‘காய் சுமக்க’ச் செல்வார்கள்.

அதாவது, வாழை தோப்புக்குச் சென்று முற்றிய நிலையில் இருக்கும் வாழைத்தார்களை அறுத்து, அதனைத் தலையில் சுமந்து சென்று லாரியில் ஏற்றும் பணி. கூலியாட்களில் ஒருவராக அவ்வேலையைச் செய்ய வேண்டும். ஆண்கள் ஒரு சாக்கில் நான்கு வாழைத்தார்கள் சுமக்கின்றனர் என்றால், பெண்களும் குழந்தைகளும் மூன்று அல்லது இரண்டு தார்களைச் சுமக்க வேண்டும்.

வாழை வியாபாரியிடம் (ஜெ.சதீஷ்குமார்) வாங்கிய கடனுக்காக, அதனைப் பெற்றுத் தந்த புரோக்கரின் (பத்மன்) நினைவூட்டும் பேச்சுக்களுக்காக, தொடரும் அந்த கடன் சுமையில் இருந்து விடுபட மாட்டோமா என்ற ஆற்றாமைக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் பதின்ம வயதுகளில் இருக்கும் ஆண் குழந்தைகளின் விடுமுறை நாட்கள் களவாடப்படுகின்றன.

’கூடுதலாக ஒருவர் வேலை செய்தால் கடன் எளிதாக அடையும்’ என்று சிவனணைந்தானையும் அவரது சகோதரி வேம்புவையும் (திவ்யா துரைசாமி) அவ்வேலைக்கு அழைத்துச் செல்கிறார் அவரது தாய் (ஜானகி).

அந்த இரண்டு நாட்கள் வேலை செய்த அலுப்பும் வேதனையும், அடுத்து வரும் ஐந்து நாட்களும் பள்ளியில் சிவனணைந்தானையும் சேகரையும் கழுத்தைச் சாய்த்தவாறே இருக்கச் செய்கிறது.

அந்த நாட்களில் சிவனணைந்தானை நிம்மதி கொள்ளச் செய்கிறது ஆசிரியை பூங்கொடியின் (நிகிலா விமல்) வரவு. பருவ வயது ஈர்ப்பு என்றபோதும், அந்த ஒரு விஷயத்திற்காகவே அடிக்கடி அவரைக் கிண்டல் செய்து வருகிறார் சேகர்.

பூங்கொடி குறித்த எண்ணங்களும் நினைவுகளும் சிவனணைந்தான் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஒரு சனிக்கிழமையன்று, அது அவரது வாழ்வையே புரட்டிப்போடும் சம்பவத்தையும் நிகழ்த்துகிறது.

வாழைத்தார் சுமக்க அனைவரையும் ஏற்றிச் செல்ல ஊருக்குள் லாரி வருகிறது. அன்றைய தினம், பள்ளி ஆண்டுவிழாவுக்கான நடனப் பயிற்சியில் பங்கேற்கச் சிவனணைந்தான் பள்ளி செல்ல வேண்டும்.

தனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், மகனும் மகளும் ‘காய் சுமக்கும் வேலைக்குச் சென்றாக வேண்டும்’ என்று பிடிவாதமாக இருக்கிறார் அவர்களது தாய். ஆனால், வேம்புவும் அக்கிராமத்தைச் சேர்ந்த கனியும் (கலையரசன்) லாரியில் ஏறிய சிவனணைந்தானைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

பயிற்சி முடிந்தாலும், காலையும் மதியமும் சாப்பிடாத காரணத்தால் பசி அவரை வாட்டுகிறது. அதனைத் தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள், வாழ்வின் விளிம்பில் அவரைக் கொண்டுபோய் நிறுத்துகிறது.

அன்றைய தினம் பல கொடிய அனுபவங்களைச் சிவனணைந்தானுக்குத் தருகிறது. அவை எத்தகையவை என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

ஏழ்மையை விரட்ட எளிய மக்கள் படும் பாடுகளும், தொடரும் கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளும், அவற்றின் இடையே அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சுக துக்கங்களும் ‘வாழை’யில் நிரம்பிக் கிடக்கின்றன.

தொண்ணூறுகளின் இறுதியில் திருநெல்வேலி வட்டாரத்தின் ஒரு பகுதியில் நிகழும் இந்தக் கதையில் அச்சமூகத்தில் நிலவிய சாதீய, பொருளாதார பாதிப்புகளை அம்மக்களின் தினசரி வாழ்வினூடாக உணர்த்தும் மாரி செல்வராஜின் கதை சொல்லல் இப்படத்தைக் கொண்டாட வைக்கிறது.

Vaazhai Movie Review

யதார்த்த மனிதர்கள்!

இரண்டு சிறுவர்கள், அவர்களது மனவோட்டங்களைச் சொல்லும் காட்சிகள் இருந்தாலும், ‘வாழை’ ஒரு சிறார் படமல்ல; அது ஒரு மனிதனின் ஒரு பகுதியைச் சொல்கிற படம் என்பதில் தெளிவாக நின்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

இயக்குனரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிவனணைந்தானாக வரும் பொன்வேலும், சேகராக வரும் ராகுலும் இதில் நடித்துள்ளனர்.

பூங்கொடியாக வரும் நிகிலா விமலிடம் உரையாடுகிற காட்சிகளில் அவர்கள் இருவரும் வெளிப்படுத்துகிற நடிப்பு அருமை. அதேபோல கோபம், அழுகை, மகிழ்ச்சி, பருவ ஈர்ப்பு, வியப்பு என்று ஒவ்வொன்றையும் வெளிப்படுத்துகிற இடங்களில் அசத்தியிருக்கிறார் பொன்வேல்.

‘நம்மூர்ல கமல் படம் எங்க ஓடுது, ரஜினி படம்தான் ஓடுது’ என்பது போன்று பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார் ராகுல்.
மாணவர்களை ஒரு இளம் ஆசிரியை எப்படி நோக்குவார் என்பதைக் கண்ணியமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் நிகிலா. அதற்கேற்ப, அவருக்கான காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஊரில் இருக்கும் இளைஞர்களில் ஒருவர் என்பதைச் சொல்லும் வகையில், கனி எனும் பாத்திரத்தில் சில காட்சிகளில் வந்து போயிருக்கிறார் கலையரசன். வேம்புவாக வரும் திவ்யா துரைசாமி மீதான காதலைப் பார்வையிலேயே அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் நம்மை ஈர்க்கிறது.
போலவே, வெறுமனே காதல் மட்டுமல்லாமல் திருமண வயதில் இருக்கும் ஒரு பருவப்பெண் சுமக்கும் பல்வேறு உணர்வுகளை இதில் வெளிக்காட்டியிருக்கிறார் திவ்யா.

இதில் வியாபாரியாக ஜெ.சதீஷ்குமாரும் அவரது வேலையாளாக பத்மனும் நடித்துள்ளனர். அவர்களை வில்லன்களாக காட்டாமல், அவர்களது சிந்தனைகளை வில்லத்தனமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

திவ்யா, பொன்வேலின் தாயாக நடித்துள்ள ஜானகி, படம் முழுக்கச் சாதாரண கிராமத்துப் பெண்மணியாகவே இதில் இருக்கிறார். ஒரு காட்சியில் ‘எம்புள்ளைய சாப்பிட விடாமப் பண்ணிட்டனே’ என்று சோற்றைத் தன் மீது கொட்டி அழும் காட்சியில் நம்மைக் கண்ணீரில் நனைய வைத்திருக்கிறார்.

இது தவிர்த்து பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளாக வருபவர்கள், ஊர் மக்கள் என்று பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களில் சேகரின் தாயாக வருபவரின் இருப்பு நம் நினைவில் நிற்கிறது.

’வாழை’யின் ஆகப்பெரிய ப்ளஸ், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. கதை நிகழும் இடத்திற்கு நாமே நேரில் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது அவரது பணி. அது எளிதில் கைவரப் பெறாத ஒன்று என்பதால் நமது பிரமிப்பு உயர்ந்து நிற்கிறது.

சூரிய பிரதமனின் படத்தொகுப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது. காட்சிகளை ‘கட்’ செய்திருக்கும் கால அளவு கனகச்சிதம்.

ஆனால், கிளைமேக்ஸ் காட்சிகளில் ஷாட்களை அடுக்கியிருக்கும் விதமும், முன்பின்னாக நிகழ்ந்ததைச் சொல்லியிருக்கும் உத்தியும் திருப்தி தருவதாக இல்லை.

’அப்படித்தான் அக்காட்சிகள் அமைய வேண்டும்’ என்ற இயக்குனரின் தீர்மானம் அம்முடிவின் பின்னிருக்கலாம். ஆனால், அதுவரையிலான இயக்குனரின் கதை சொல்லலை இடைமறித்தது போலவே அந்த உத்திகள் அமைந்திருக்கின்றன. இது ஒரு தனிப்பட்ட கருத்து.

குமார் கங்கப்பனின் கலை வடிவமைப்பானது தொண்ணூறுகளின் இறுதியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கதைக்கு உருவம் தர முயன்றிருக்கிறது. சினிமா சுவரொட்டிகள், திருமண அறிவிப்புகள், பள்ளி வகுப்பறைகள், வீடுகளின் உட்புறம் போன்றவற்றைத் திரையில் காட்டியிருப்பதில் அவரது குழுவினரின் பங்களிப்பு அருமை.

பத்மன், கலையரசன் மோதல், கிளைமேக்ஸ் காட்சி ஆகியவற்றில் யதார்த்தத்தை உணர வைக்கிறது திலீப் சுப்பராயனின் ஆக்‌ஷன் கொரியோகிராபி.

பள்ளி நடனப் பயிற்சி காட்சியில் சாண்டியின் நடன வடிவமைப்பு அருமை.

சுரேன், அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, ஸ்ரீ ஸ்வர்ணாவின் ஆடை வடிவமைப்பு, கணபதியின் ஒப்பனை மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ் குழுவினரின் பங்களிப்பு என்று பலரது உழைப்பு ‘வாழை’ தரும் திரையனுபவத்தைச் செறிவானதாக மாற்றியிருக்கிறது.

Vaazhai Movie Review

படம் தரும் அனுபவம்!

’யோல்’, ‘உங்க அம்மை என்ன சொல்லுதா’, ‘நாளைக்கு காய் சுமக்கப் போனும்கறதை மறந்துட்டியோ’ என்பது போன்ற சொல்லாடல்கள் நெல்லை வட்டாரத்தின் ஒரு பகுதிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. அதில் இருக்கும் இயல்புத்தன்மை, அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களிடத்தில் வெவ்வேறு நினைவலைகளை ஏற்படுத்தும்.

‘சிவனைந்தான்’ என்று படம் முழுக்கச் சொல்லப்படும் அச்சிறுவனின் பெயரை ‘சிவனணைந்தான்’ என்று சொல்வதே சரியானது. அது போன்ற பெயர்களின் பின்னணியை அறிய முயல்வது, அம்மக்கள் வாழ்ந்த நிலத்தில் நிலவிய கலாசாரத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்பும்.

‘வாழை’, தொண்ணூறுகளின் இறுதியில் அவ்வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இறுதியில் அதனை இயக்குனர் குறிப்பிடும்போதே, நிழலாக இருந்த கிளைமேக்ஸ் காட்சி நிஜம் எனும் அதிர்ச்சி நம்மைத் தாக்குகிறது.

இந்தப் படத்தில் சிறுவனின் தாயார் தன் கையில் கதிர் அரிவாள் சின்னத்தைப் பச்சை குத்தியிருப்பார். ஊரில் யார் இறந்தாலும், மரணித்த கணவர் புகைப்படம் முன் நின்று அழுவார்.

ஒரு காட்சியில் கையில் குத்தியிருக்கும் பச்சையைக் காட்டி, ‘இதை உங்கப்பனா நினைச்சுதான் உங்க ரெண்டு பேரையும் வளர்த்துட்டு வர்றேன்’ என்று சொல்வதாக ஒரு வசனம் உண்டு. அது, அவரைப் போன்ற பல தாய்மார்களின் வலியையும் வேதனையையும் நமக்குணர்த்தும்.

’வாழை’ கதையிலும் சாதீய முரண்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அவற்றால் நசுக்கப்படும் சிலரது கனவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றைப் பிரசாரமாகச் சொல்லக்கூடாது என்ற மாரி செல்வராஜின் உறுதிப்பாடு, தனது ‘சினிமா மொழி’ மீதான அவரது அபார நம்பிக்கையைக் காட்டுகிறது.

பூங்கொடி என்ற பெயரில் அமைந்த இளையராஜாவின் பாடல்கள் மற்றும் கமல் - ரஜினி ரெஃபரன்ஸ், தேவாவின் ‘தூதுவளை இலையரைச்சு’, ‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி’ பாடல்கள் ஒலிக்குமிடங்கள் வெறுமனே ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாகவோ, இயக்குனரின் விருப்பத்தைக் காட்டுவதாகவோ இல்லாமல் கதை அடுத்தகட்டத்திற்கு நகர உதவியிருக்கின்றன. அந்த கதை சொல்லலே, மாரி செல்வராஜின் ‘வாழை’யைக் கொண்டாட வைக்கிறது.

இதில் சில ரசிகர்கள் குறைகள் கண்டுபிடிக்க முயலலாம். ஆனால், அவர்களால் கூட இப்படத்தினைப் புறக்கணிக்க முடியாது. அந்த வகையில், ஒரு ரசிகன் நினைவில் கொள்ளத்தக்க படமாக உள்ளது ‘வாழை’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொட்டுக்காளி - விமர்சனம்!

வேதா – விமர்சனம்!

கூடுதல் திரைகளில் டிமான்டி காலனி 2 !

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்: அரசு விளக்கம்… போராட்டம் தொடரும் – எடப்பாடி திட்டவட்டம்!

கொட்டுக்காளி – சூரி தாண்டவமாடியிருக்கிறார் : பாலா பாராட்டு!

முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?

Comments

Post a Comment

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்