Skip to main content

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்!

தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல்.

‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது.

அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார்.

மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?!

இரு துருவம்.. ஒரு பயணம்..!

சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை.

ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்கிறார். ஆதரவற்று நிற்கும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். சில நாட்களிலேயே அவருக்குக் குமார் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

கலையழகி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார் குமார். தாத்தாவை அங்கு தங்க வைக்கிறார்.

மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் சண்முகம் (சார்லஸ் வினோத்), ‘திருநெல்வேலி வரை சென்று ஒரு பிணத்தை ஒப்படைத்தால் நிறைய பணம் கிடைக்கும்’ என்கிறார். ஏற்கனவே பணத் தேவை உச்சத்தில் இருப்பதால், அவரிடம் ‘சரி’ என்று சொல்லிவிடுகிறார் குமார்.

மனைவியை ஒருவழியாகச் சமாதானப்படுத்தியபிறகு, குமார் தன் பணியைத் தொடங்குகிறார். தனது வேனை எடுத்துக்கொண்டு போகிறார். அப்போதே, ‘இதையா எட்த்துட்டு போற.. இது தெருவையே தாண்டாதே’ என்கிறார் சண்முகம். அதையும் மீறி, அந்த வண்டியில் சடலத்தை ஏற்றிச் செல்கிறார் குமார்.

இறந்தவரின் பெயர் நாராயண பெருமாள். திருநெல்வேலி அருகே களக்காடு அருகே அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கிருக்கும் இசக்கி முத்து (பவன்), அவரது வாரிசுகளில் ஒருவர். ஆனால், அவரது தாய் நாராயண பெருமாளின் அதிகாரப்பூர்வமற்ற மனைவியாக வாழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இருந்தவர்.
அதனால், இசக்கி முத்துவும் அவரது சகோதரிகளும் சிறு வயதில் ஊராரின் அவமானங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அதனைச் சரி செய்ய, ‘தந்தை நாராயண பெருமாளுக்கு இசக்கி முத்து கொள்ளி வைப்பதுதான் ஊரார் மத்தியில் தங்களுக்கான மரியாதையாக இருக்கும்’ என்று அவர்களது உறவினர்கள் அனைவரும் நினைக்கின்றனர்.

அதேநேரத்தில் சேரன்மகாதேவியில் வசிக்கும் சங்கர பாண்டியனோ (ஆடுகளம் நரேன்), ‘வாழ்நாள் முழுக்கத் தங்களுடன் வசிக்காத தந்தைக்கு கொள்ளி வைக்கும் உரிமையாவது தங்களுக்கு வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதனால், நாராயண பெருமாள் சடலத்திற்கு யார் ஈமச்சடங்குகள் செய்து கொள்ளி வைப்பது என்பதில் தகராறு ஏற்படும் சூழல் உருவாகிறது. அதற்காக, சங்கரபாண்டியன் தரப்பு இசக்கிமுத்துவிடம் பஞ்சாயத்து பேசுகிறது.
அவர்களிடம் ஆத்திரத்தைக் காட்ட முடியாமல், அந்த நேரத்தில் கல்யாண மண்டபத்தில் இருந்து பாடல் சத்தமாக ஒலிக்கிறது. அது, அந்த வட்டார ஜமீன் பெண்ணின் திருமண விழா. அங்கு சென்று ஸ்பீக்கரை அடித்து உடைக்கும் இசக்கி முத்து, அங்கிருப்பவர்களை எச்சரிக்கிறார்.

இந்த விஷயம் காவல் நிலையம் வரை செல்கிறது. திருமண வீட்டில் தகராறு வேண்டாம் என்று நினைக்கும் ஜமீன் (வேல.ராமமூர்த்தி), ‘மீண்டும் இசக்கிமுத்து தகராறு செய்தால் நடப்பதே வேறு’ என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

இறுதியாக, அடுத்த நாள் மதியம் 2 மணிக்குள் சடலத்தைக் கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் முடித்து மயானத்திற்குக் கொண்டு செல்வதென முடிவாகிறது.

இதற்கிடையே, அமரர் ஊர்தியில் வரும் குமாரோடு சேர்ந்து பயணிக்கிறார் நளின மூர்த்தி (கருணாஸ்). கன்னியாகுமாரி வரை செல்ல வேண்டும் என்று கூறி, கையில் போதிய பணம் இல்லாமல் அவ்வண்டியில் அவர் ஏறியிருக்கிறார். ’அவ்வப்போது நின்றுபோகும் வாகனத்தைத் தள்ள ஒரு ஆள் வேண்டுமே’ என்று அவரை ஏற்றியிருக்கிறார் குமார்.

செல்லும் வழியில், ஒரு ஆணும் பெண்ணும் அவ்வாகனத்தை மறிக்கின்றனர். தங்களை அழைத்துச் சென்று மதுரையில் விட்டுவிடுமாறு கூறுகின்றனர். அவர்களைப் பார்த்தாலே காதல் ஜோடி என்று தெரிகிறது. குமார் மறுக்க, நளினமூர்த்தி அதனை எதிர்க்கிறார். ‘உதவி செய்தால் மனிதனுக்கு தேவதை போன்று இறக்கை முளைக்கும்’ என்கிறார். இறுதியில் அவரும் வாகனத்தை விட்டு இறங்குவதாகச் சொல்ல, அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொள்கிறார் குமார்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் இறங்கப்போகும் இடம் வருகிறது. அப்போது, அந்த ஆணின் தந்தையைச் சிலர் கொலை செய்ததாகத் தகவல் வருகிறது. அந்த நேரத்தில், சிலர் அவ்வாகனத்தைச் சுற்றி வளைக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் அப்பெண்ணின் உறவினர்கள். காதல் ஜோடியான அவர்கள் இருவரையும் கொலை செய்வதுதான் அவர்களது திட்டம்.

அவர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக, வாகனத்தை வேகமாக ஓட்டுகிறார் குமார். ஆனாலும் பலன் ஏதும் இல்லை.
ஓரிடத்தில் அந்தக் கும்பல் சுற்றி வளைக்கிறது. அந்த ஜோடியை இழுத்துச் செல்கிறது. ’அவர்களை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்’ என்று வண்டியில் இருந்து இறங்குகிறார் நளினமூர்த்தி. ’உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. எனக்கு இழக்கறதுக்கு யாரும் இல்ல. செத்தா நாலு பேரு கூட திரள மாட்டாங்க’ என்கிறார்.

அவரது வார்த்தை குமாரை உலுக்குகிறது. அந்த நபர்களிடம் இருந்து காதல் ஜோடியை மீட்டு, அந்த ஆணின் வீட்டில் இறக்கி விடுகிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவர்களை இன்னொரு ஆபத்து சூழ்கிறது. அவர்கள் ஏற்றி வந்த நாராயண பெருமாளின் சடலத்தை யாரோ எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

அதனை யார் எடுத்தது? அதற்கான பதில் தெரியாமல் திகைத்துப்போய் குமாரும் நளினமூர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர்.

அந்த நேரத்தில், அவர்கள் தாக்கிய நபர்களில் ஒருவர் ‘அந்தப் பொணம் எங்ககிட்டதான் இருக்குது’ என்கிறார். உடனே, அவர் சொல்லுமிடத்திற்கு இருவரும் செல்கின்றனர்.

இன்னொருபுறம், சங்கரபாண்டியனின் சகோதரர்கள் தந்தையின் சடலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிடுகின்றனர்.

விஷயம் தீயாகப் பரவ, இசக்கிமுத்து பதற்றமடைகிறார். அவரது ஆட்கள் ‘வண்டி எங்க வந்துகிட்டு இருக்கு’ என்று குமாரிடம் கேட்கின்றனர். முதலில் பதில் சொல்பவர், அடுத்து எதுவும் சொல்ல முடியாமல் மொபைல் அழைப்பை ஏற்காமல் இருக்கிறார்.

மெதுவாக நேரம் நகர ஆரம்பிக்கிறது. நாராயண பெருமாள் சடலத்திற்கு யார் கொள்ளி வைக்கப் போகின்றனர்? காணாமல் போன சடலத்தை குமாரும் நளினகுமாரும் கண்டுபிடித்தார்களா? மருத்துவமனையில் இருக்கும் குமாரின் மனைவி நிலை என்ன? அத்தனை பிரச்சனைகளுக்கும் அந்த பயணத்தில் தீர்வுகள் கிடைத்தனவா என்று சொல்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’யின் மீதி.

குமாரும் நளினமூர்த்தியும் இரு துருவங்கள் என்பதுதான் இந்தக் கதையின் முக்கிய அம்சம். அவர்கள் சேர்ந்து பயணிக்கும்போது சில தீர்வுகள் கிடைக்கின்றன என்பது இதன் யுஎஸ்பி. ஆனால், அவ்விரண்டுமே இன்னும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று வருந்துகிற அளவுக்கு இருக்கிறது இதன் திரைக்கதை.

திரைக்கதையில் செறிவு..?!

விமலுக்கு இது பெயர் சொல்லும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது. உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் நம்மை எளிதாகக் கண்ணீர் விட வைக்கிறார். ‘இப்படியொரு நடிப்புத் திறமையை வைத்துக்கொண்டா ஏதேதோ படங்களில் நடிக்கிறார்’ என்று நம்மை வருந்த வைக்கிறார்.

விமலின் ஜோடியாக வரும் மேரி ரிக்கெட்ஸுக்கு அதிகக் காட்சிகள் இல்லை. ஆனாலும், ‘மெச்சூர்டான பெண்’ என்ற பாத்திரத்திற்கு ‘ஓகே’ எனும் விதமாகத் தோன்றியிருக்கிறார்.

கருணாஸ் இதில் வயதான நாடக நடிகராகத் தோன்றியிருக்கிறார். தொடக்க காட்சிகளில் லேசாகப் பெண்மையைப் பாவனைகளில் வெளிப்படுத்துகிறார். அது, அவரது வயதையும் குணத்தையும் நமக்குச் சொல்லாமல் சொல்வதாக இருப்பது அழகு.

அவரது பாத்திரத்தை இன்னும் செதுக்கி, நேர்த்தியாகச் சில காட்சிகளை அமைத்திருக்கலாம். இயக்குனர் மைக்கேல் ராஜா அதனைத் தவறவிட்டிருக்கிறார்.

ஆடுகளம் நரேன், அவரது சகோதரர்களாக நடித்தவர்கள், தாய்மாமனாக நடித்துள்ள மனோஜ்குமார் மற்றும் பவன், தீபா சங்கர், வேல.ராமமூர்த்தி, சார்லஸ் வினோத், கல்கி உட்படச் சுமார் ஐம்பது பேராவது இப்படத்தில் தலைகாட்டியிருப்பார்கள்.

’புல்லட்டு வண்டியில’, ’ஏண்டி என்ன இப்படிப் பார்க்குற’ பாடல்களை ஈர்க்கும்படியாகத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ரகுநந்தன். அவரது பின்னணி இசை, காட்சிகள் நகர உதவியிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் டிமல் சேவியர் எட்வர்ட்ஸ் சில காட்சிகளைத் தரமாகத் தந்திருக்கிறார். சில இடங்களில் ‘வீடியோ தரம்’ எட்டிப் பார்க்கிறது.

படத்தொகுப்பாளர் தியாகராஜன், விமல் பாத்திரப் பின்னணியைச் சொன்ன இடத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். போலவே, கிளைமேக்ஸில் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவத்தை ‘எடிட்’ செய்திருக்கும் விதம் நமக்கு திருப்தி தரும் வகையில் இல்லை.

இவர்கள் தவிர்த்து கலை இயக்குனர் சுரேந்தரன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தின் பின்னணியில் உள்ளது.

ஒரு கதை சொல்லியாக, இதில் நல்லதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே.ராஜா.
ஆனால், ஒரு ‘உலக சினிமா’ அனுபவத்தைத் தரவல்ல ஒரு திரைக்கதையைப் படைக்காமல் கோட்டை விட்டிருக்கிறார். அதனால், ஒரு ‘ஓகே’ ரக உள்ளூர் சினிமாவாக அமைந்திருக்கிறது இப்படம்.

‘மிஸ்’ஸான வாய்ப்பு!

இதற்கு மேல் வருபவை ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், படம் பார்க்காதவர்கள் தவிர்த்துவிடலாம்.

இந்தக் கதையில் குமார், நளினமூர்த்தி, சங்கரபாண்டியன், இசக்கி முத்து, இளம் ஜோடிகள் என்று சில முதன்மை பாத்திரங்களுக்குச் சில பிரச்சனைகளைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே.ராஜா. ஆனால், அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டும் காட்சிகளை இதில் அமைக்கவில்லை.

இரண்டாம் பாதியில், பிணம் ஒருவரது கைகளுக்குக் கிடைப்பதும், இன்னொரு தரப்பு டென்ஷன் ஆவதுமாகத் திரைக்கதை நகர்கிறது.

போலவே, அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று குமாரும் நளினமூர்த்தியும் தவிக்கின்றனர். இறுதியாக, அவர்கள் ஒரு தீர்வை எட்டுகின்றனர்.

இந்த மூன்றையும் ஒரு புள்ளிக்கு நகர்த்தியிருந்தால், திரைக்கதையில் விறுவிறுப்பு கூடியிருக்கும். நேர்த்தியான வடிவமும் வாய்த்திருக்கும். அதனை ‘மிஸ்’ செய்திருக்கிறார் இயக்குனர்.

இந்தியில் வெளியான ‘கார்வான்’, தமிழில் ‘எம்டன் மகன்’, ’ஏ1’ உட்பட மிகச்சில படங்கள் துக்க வீட்டில் நிகழும் இறுதிச்சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க படமாக இடம்பெற்றிருக்க வேண்டியது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’.

பட்ஜெட் குறைவு, போதிய முன்தயாரிப்பு பணிகள் இன்மை, கலைஞர்களின் ஒருங்கிணைப்பு அமையாமை உட்பட ஏதோ சில காரணங்களால், ஒரு நல்ல கதை சிறந்த திரைக்கதையாக மாறாமல் தடைபட்டிருக்கிறது. அதையும் மீறி, நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது இப்படம்.

கொஞ்சம் முயன்றிருந்தால், செய்நேர்த்தி கூட்டியிருந்தால், இன்னும் பல தொலைவினை எட்டியிருக்கும் இந்த ‘போகுமிடம் வெகு தூரமில்லை’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஹேமா கமிட்டியால் களேபரம்: நடிகை குற்றச்சாட்டு… டைரக்டர் ரஞ்சித், நடிகர் சித்திக் அவுட்!

”புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை” : அமைச்சர் சக்கரபாணி

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக